நஞ்சாகும் உணவு குறித்து சில உண்மைகள்!

நஞ்சாகும் உணவு குறித்து சில உண்மைகள்!

நஞ்சாகும் உணவு குறித்து சில உண்மைகள்!

 

உணவைப் பற்றிய எண்ணற்ற உண்மைகளில் ஒருசிலவற்றையாவது வெளிப்படுத்த வேண்டும் என எண்ணுகிறேன். ஏதேனும் ஒரு பன்னாட்டு உணவு வகை தடை செய்யப்படும்போது, அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடையும் மனிதர்களுக்கானது இந்தப் பகிர்வு.

விளம்பரங்கள், மருத்துவப் பரிந்துரைகள், சங்கிலித் தொடர் சந்தைப்படுத்தல்கள் (chain link marketing) உள்ளிட்ட பலவகையான உத்திகள் வழியாக உங்கள் உணவாக மாறிக் கொண்டுள்ள ‘சரக்குகள்’ அனைத்துமே தடை செய்யப்பட வேண்டியவைதான். அரசாங்கம்தான் இவற்றையெல்லாம் தடை செய்ய வேண்டும் என நினைக்காமல், நீங்களே அவற்றை நிராகரிக்க வேண்டும். அதுதான் உண்மையான தடை.

ஒரு வணிக உணவில் ஏதேனும் சில வேதிப் பொருட்கள் மிகையாக இருப்பதாகவும் அந்தக் காரணத்தினால் அந்த உணவைத் தடை செய்வதாகவும் அரசும், சில அமைப்புகளும் கூறுவதை இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் பரிதாபத்துக்குரியவர். ஏனெனில், வேதிப் பொருட்கள் இல்லாத வணிக உணவு என எதுவுமே இல்லை. எல்லா வணிகப் பண்டங்களும் வேதி வினைகளுக்கு ஆட்பட்டுத்தான் தயாரிக்கப்படுகின்றன.

அரசாங்கமும் அதன் துணை நிறுவனங்களும் எப்போதும் கூறும் வாசகத்தை நினைவுபடுத்திப் பாருங்கள், &ddquo;அந்த உணவு வகையில் குறிப்பிட்ட வேதிப் பொருள் ‘அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும்’ அதிகமாக உள்ளது” என்பதுதான் அந்த வாசகம். இதைக் ’கண்டுபிடிப்பதற்கு’ எவரேனும் ஒரு தன்னார்வலர் ஆய்வகங்களுக்கு அலைய வேண்டும், நீதிமன்றங்களுக்கு நடக்க வேண்டும், ஊடகங்களை நாட வேண்டும்.

’அனுமதிக்கப்படும் அளவு’ என்றால் என்ன? எந்தப் பரிசோதனைகளின் அடிப்படையில் அவை தீர்மானிக்கப்படுகின்றன? இந்த அளவு வேதிப் பொருட்களை அனுமதித்தால் தீங்கில்லை என நம்பும்படியான ஆதாரங்கள் யாவை? ஆகிய கேள்விகளை உங்களால் சிந்திக்க முடிகிறதா!

உங்கள் சிந்தனைப் போக்கு அறிவுவயப்பட்டது. ஏதேனும் ஒரு புள்ளிவிவரத்தை எடுத்து வீசினால் நீங்கள் ஏமாந்துபோவீர்கள். சில வேதிப் பொருட்களின் பெயர்கள், சில ஊட்டச் சத்து வகைகள், அயல் நாட்டு அறிக்கைகள், பெருநிறுவன அறிவிப்புகள், பிரபலங்களின் வாக்குறுதிகள் ஆகியவற்றை நம்பும் வகையில்தான் நீங்கள் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். உணவில் ஏன் வேதிப் பொருட்களைக் கலக்கிறீர்கள்? உணவு என்பதே இயற்கையின் கொடைதானே, அது ஏன் செயற்கைத் தன்மையானதாக மாற்றப்படுகிறது? என்ற கேள்வி மிகவும் எளிமையானது. ஒருவகையில் இது பாமரத்தனமான கேள்வி. இந்தக் கேள்விக்கு எந்த அரசாங்கமும் பெருநிறுவனமும் விடையளிக்காது. அவர்களுக்கு விடை தெரியும், ஆனால் சொல்ல மாட்டார்கள். ஏனெனில், அந்த விடையில்தான் மனித உயிர்களோடு விளையாடி, மக்களின் உடல்நலனைச் சூறையாடிக் கொள்ளையடிக்கும் தந்திரம் ஒளிந்துள்ளது.

கெல்லாக்ஸ் சோளத்தில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது என விளம்பரம் செய்யப்படுகிறது. ஹிஸ்டரி சேனல் எனும் தொலைக்காட்சிக் குழுவினர் கெல்லாக்ஸ் நிறுவனத் தொழிற்சாலைக்குச் சென்று ஓர் ஆவணப்படம் எடுத்தார்கள். நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட பல கேள்விகளுக்கு அந்தத் தொழிற்சாலைப் பிரதிநிதி விடை தந்தார். ஒரே ஒரு கேள்விக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். ‘உங்கள் சோளப் பொரி உணவில் மிகையான அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இந்த இரும்புச் சத்தினை எந்தப் பொருளிலிருந்து எடுத்து, சோளத்தில் கலக்கிறீர்கள்?’ என்பதுதான் அக்கேள்வி.

இயற்கையான அளவைக் காட்டிலும் கூடுதலான இரும்புச் சத்து கெல்லாக்ஸ் சோளத்தில் இருப்பதால் அந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அந்த நிறுவனப் பிரதிநிதியின் பதில், ‘அதைச் சொல்ல முடியாது. ஏனெனில் அது எங்கள் தயாரிப்பு இரகசியம்’. இப்படி ஒரு பதிலை அவர்களால் வெளிப்படையாகக் கூற முடிகிறது. இரும்புச் சத்து எனும் வாசகத்தை நீங்கள் கவனிக்கிறீர்கள். அந்தச் ‘சத்து’ எந்தப் பொருளிலிருந்து எடுக்கப்பட்டது என்பதைப் பற்றிய சிந்தனை உங்களில் பலருக்கு இருப்பதில்லை. உங்களுக்கு ஊட்டப்பட்டது இப்படியான அரைவேக்காட்டு அறிவு.

பிராய்லர் கோழியில் புரதம் இருக்கிறது, பாலில் சுண்ணாம்புச் சத்து இருக்கிறது, ஊட்டச் சத்து பானங்களில் பல்லூட்டச் சத்துகள் (multi nutrients) உள்ளன என்றெல்லாம் அறிவிக்கப்படுகிறது. இந்தச் சத்துகள் எல்லாம் எந்தப் பொருட்களின் மூலத்திலிருந்து வருகின்றன என எவரும் அறிவிப்பதில்லை. நவீன அறிவியல் என்பதே மோசடிகளின் பாதுகாப்பு வளையம்தான் என்பது என்னைப் போன்ற முட்டாள்களின் கருத்து. விலங்குகளின் எலும்புகளிலிருந்து தயாரிக்கப்படும் சுண்ணாம்புச் சத்து பல உணவுகளில் கலக்கப்படுகிறது. அவை மனிதர்களுக்கானவையே அல்ல. பேராற்றலின் படைப்பில், ஒவ்வொரு உயிரினத்திற்கெனவும் சத்து வகைகளும் அளவுகளும் தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புரதச் சத்துதான் பாம்பின் உடலில் உள்ள நஞ்சு. பாம்புகளின் கழுத்திலிருந்து நஞ்சை எடுத்து உணவில் கலந்துவிட்டு, ‘இது புரதச் சத்து மிக்க உணவு’ எனத் தம்பட்டம் அடிக்க முடியாது. எளிதில் செரிக்க இயலாத அடர்த்தியான புரதம் பாம்புகளின் கழுத்தில் படைக்கப்பட்டுள்ளது. இந்தப் புரதத்தைத் தன் இரையின் மீது பாம்பு செலுத்தும்போது, அந்த இரையின் இரத்தத்தில் அடர் புரதம் எனும் நஞ்சு கலக்கிறது. செரிக்க இயலாத அளவுக்கு அடர்த்தியான புரதம் என்பதால் இரை மயங்குகிறது அல்லது இறந்துபோகிறது.

எந்த உயிரியின் மீது எவ்வளவு நஞ்சு செலுத்த வேண்டும் என்பதைப் பாம்புகள் அறிந்து வைத்துள்ளன. காட்டு முயலின் மீது செலுத்தும் அளவுக்கான நஞ்சினைச் சிறு எலியின் மீது பாம்புகள் செலுத்துவதில்லை. ‘அனுமதிக்கப்படும் அளவு’ என்ற கருத்தினைப் பாம்புகள் மிகச் சரியாகக் கடைப்பிடிக்கின்றன.

நவீன அறிவியல் பெயரிட்டு அழைக்கும் சத்துகள் பொதுவானவை. ஆனால், அவை எந்த உயிரியில் இருந்து எடுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து அவற்றின் தன்மைகள் முற்றிலும் மாறுபடுகின்றன. நீங்கள் வாங்கி உண்ணும் எல்லா வணிகப் பண்டங்களும் இவ்வாறான ‘இரகசியமான’ சத்துகளைக் கலந்து தயாரிக்கப்படுபவைதான்.

சில உணவுப் பண்டங்கள் ‘அனுமதிக்கப்பட்ட அளவை’ மீறியதால்தான் இப்போது தடை செய்யப்பட்டுள்ளன என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். நிச்சயமாக, இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்பட்டுள்ள பல்வேறு உட்பொருட்களின் மூலப் பொருட்கள் எவை? அவை மனிதர்களின் உணவாகும் தகுதி உள்ளவையா? ஆகிய இரண்டு கேள்விகளும் இன்னும் கேட்கப்படவே இல்லை. கேட்டாலும் பதில் கிடைக்காது. பன்னாட்டு வணிகச் சட்டங்கள் இந்த ‘இரகசியங்களை’ப் பாதுகாக்கின்றன. இவற்றுக்குக் ‘காப்புரிமை’ எனும் மதிப்பு மிக்க பெயர் உள்ளது.

ஆக, உள்ளே என்ன கலக்கப்பட்டிருக்கிறது என்பதே தெரியாமல் பொருட்களை வாங்கி உண்ணும் ஏமாளித்தனமான சமூகம் இப்போது உருவாகியுள்ளது.

இந்தச் சமூகம்தான் பாட்டி கடைகளில் விற்கப்பட்ட இலந்தைப் பழங்களில் ஈக்கள் மொய்ப்பதைக் கண்டு, அவை அசுத்தமானவை என வெறுத்து ஒதுக்கியது.

பெரு நிறுவனங்களின் வணிக உணவுப் பண்டங்கள் மீது ஈக்கள் அமர்வதில்லை. ஈக்கள் நஞ்சு உணவுகளை வெறுக்கின்றன. ஏனெனில் ஈக்கள் படிப்பதும் இல்லை, விளம்பரங்களுக்கும் மருத்துவ அறிவுரைகளுக்கும் ஏற்ப ஆடுவதுமில்லை. சுருங்கச் சொன்னால், ஈக்களும் பலவகைப் புழுக்களும் கொசுக்களும் பகுத்தறிவு இல்லாத உயிரினங்கள்.

அவற்றுக்குத் தெரிந்த ஒரே ஒரு மந்திரம், ‘உணவு படைக்கப்படுகிறதே தவிர, தயாரிக்கப்படுவதில்லை’ என்பதுதான்.

இந்தக் கட்டுரையின் வழியாக உங்களிடம் நான் முன்வைக்கும் சேதி என்னவெனில், வணிகப் பண்டங்களை அரசாங்கம்தான் தடை செய்ய வேண்டும் எனக் காத்திருக்காதீர்கள். நீங்களே அவற்றைத் தடை செய்ய முடியும்.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்