ராபர்ட் கால்டுவெல்லை நினைவுகூர்வோம்

ராபர்ட் கால்டுவெல்லை நினைவுகூர்வோம்

தமிழை உயர்த்திப் பிடிப்போரைக் கேவலமாகப் பார்க்கும் பார்வை சகலரிடமும் விதைக்கப்படும் சூழலில் தமிழின் பெருமையையும், அதன் தனித்துவத்தையும் உலகுக்கு உரக்கச் சோன்ன ராபர்ட் கால்டுவெல்லின் 200-ஆவது நினைவு  தினத்தை (7 மே 1814 – 28 ஆகஸ்ட் 1891) முன்னிட்டு இந்த பதிவு

1814-இல் அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் கிறித்தவ சமயத்தை பரப்புவதற்காக தமிழகத்திற்கு வந்தார்.  சென்னைக்கு வந்ததும் ”துருவ்” எனும் தமிழ் கற்ற அறிஞரோடும் அந்நாளில் தமிழுக்குத் தொண்டாற்றிய வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்களோடும் நட்புப் பூண்டார். சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல், தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலானவற்றை அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக ஏறத்தாழ நானூறு கல் தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்தே சென்றார். அப்பயணத்தின்போது ‘ஆங்கிலேயாரான’ கால்டுவெல்லுக்குப் பல சத்திரங்களில் இடம் மறுக்கப்பட்டதால், மாட்டுத்தொழுவங்களில்தான் அவர் தங்க நேர்ந்தது. இறுதியில் திருநெல்வேலி (இன்று தூத்துக்குடி மாவட்டம்) மாவட்டத்தில் தேரிப்பகுதியில் உள்ள இடையன்குடியைத் தேர்ந்தெடுத்து செயல்படத் தொடங்கினார்.

அவரின் நோக்கம் முதலில் சமயப் பரப்புவதற்காகவே இருந்தது. தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.தமிழ் அவரை ஆரத்தழுவி திக்குமுக்காட செய்தது. தமிழின் பேரில் ஏற்பட்ட ஈர்ப்பு மொழியாராச்சியை நோக்கி அவரைத் தள்ளியது. அவர் 18 மொழிகளைக் கற்றார். அன்று அச்சேறாமல் இருந்த பல பண்டைத் தமிழிலக்கியங்களை (தொல்காப்பியம் உட்பட) பயின்றார். இலக்கிய வேலைகளுக்கிடையே, அந்நாளில் ஒடுக்கப்பட்ட சாதியாக அறியப்பட்ட சாணார்கள் (நாடார்கள்) கல்வி கற்றிடவும், மேலும் பல ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சாதி இழிவுகளில் இருந்து காக்க அவர்களை மதமாற்றம் செய்துவித்தார். அவர் கற்றறிந்த பிற மொழிகளுடன் தமிழ் மொழியை  ஒப்பிட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சில முடிவுகளுக்கு வந்து சேர்ந்தார். அதனை ஆய்வுநூலாக அவர் ஆங்கிலத்தில் ”திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலாக இலண்டன் பதிப்பகம் மூலம் 1856 – இல் வெளியிட்டார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் வரலாற்றில் முக்கிய திருப்புமுனை நூல் என்று சொல்லலாம். அதுவரை உருவாக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மேன்மையை அது உடைத்து நொறுக்கியது.  அதுவரை,  இந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை என்றும்,  அம்மொழியின் இலக்கணமே இதர மொழிகளுக்கு இலக்கணங்களாக ஏற்கப்பட்டன என்றும், தமிழிலுள்ள இலக்கியங்கள் கூட சமஸ்கிருத இலக்கியத்தை வழியொட்டி வந்தவைதான் என்ற கருத்தும்தான் மேலாண்மையில் இருந்து வந்தது.

ராபர்ட் கால்டுவெல் 2

ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவின் நிலம் மற்றும் மக்களின் இனம் சார்ந்த வாழ்நிலையை அறிந்துகொள்ள இலண்டனில் அமைக்கப்பட்ட ஆசியவியல் கழகத்தின் கிளை 1784-ஆம் ஆண்டு கல்கத்தாவில் அமைக்கப்பட்டது. இதன் சார்பாக இந்தியாவில் செயல்பட்ட பலரும் சமஸ்கிருத மூல மொழியிலிருந்தே இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் கிளைத்திருக்க வேண்டும் என்னும் கருதுகோளை முன்னிறுத்தியே ஆய்வு செய்தனர்.

ஆனால், சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்ட எல்லீசு உள்ளிட்டோர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகள் அல்ல என்பதை கால்டுவெல்லுக்கு முன்பே கண்டறிந்து இம்மொழிகளுக்கான திராவிடச் சான்றுகளை அகழ்ந்தெடுத்திருந்தனர். அந்த ஆய்வின் தொடர்ச்சியாக மிக வலுவான ஆதாரங்களுடன் கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் பின்வரும் உண்மைகளை தெள்ளந் தெளிவாக நிரூபித்தது.

1. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை

2. தமிழில் உள்ள சமஸ்கிருத சொற்களை எடுத்து விட்டாலும் தமிழ் தானாகவே இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி

3. இதுவரை கருதி வந்தது போல், தமிழ் மரபு என்பது இந்து மரபின் தொடர்ச்சி அல்ல

"ஆரிய சுட்டுச் சொற்கள் தமிழிலிருந்து ‘சுட்டவை’ என சமஸ்கிருத பாடையை சகித்துக்கொண்டு பிரித்துக்காட்டினார் கால்டுவெல்!"

வெறுமனே மொழி ஆராய்ச்சி எனும் எல்லைக்குள் நிறுத்தி விடாமல் தமிழ் மொழி பேசும் இனத்தவர்களின் இறைநம்பிக்கை, பண்பாடு, சாதி  என அனைத்தும் தழுவிய ஆய்வாக கால்டுவெல் மேற்கொண்டார். அன்று பார்ப்பன மேலாண்மையினை மனமுவந்து ஏற்றுக்கொண்ட தமிழர்கள், ஒடுக்கப்பட்ட மக்களான பறையர்களைத் நடத்திய காலம். ஆனால், கால்டுவெல்லின் ஆய்வு ”பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்” என்பதை நிறுவியது.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூல், தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கிய தாக்கம் ஆழமானது. தமிழ் உயர் தனிச் செம்மொழி என்ற ஆய்வு முடிவு தமிழர்களுக்குத்  தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாகத்தான் அழிந்துகொண்டிருந்த 2000 ஆண்டு கால தமிழ் இலக்கியக் கருவூலங்களெல்லாம் சி.வை.தாமோதரம் பிள்ளையாலும் உ.வே.சா. வாலும் அச்சு வாகனம் ஏறின. இருபதாம் நூற்றாண்டில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் உருவெடுக்க கால்டுவெல்லின் கோட்பாடுகள் அடித்தளமாயின.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

இன்றோ மக்களிடமும் ஆரிய  பண்பாட்டின் பேரில் கூடுதலான பற்று விதைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் தொடங்கி பெயர்விளங்கா வழிபாடுகளைக் கொண்டுவருவது வரை சூழ்ச்சி  நடந்து வருகின்றது. சமணம், பவுத்தம், சித்தர்கள், வள்ளலார் – என இருந்த நமது  மரபு மக்களிடையே இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. இன்னொருபுறம், தமிழை ஆட்சிமொழியாக, நீதிமன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாகக் கொண்டுவர அரசு மறுக்கின்றது. தாய்மொழிக் கல்வியைத் தரவேண்டிய அரசே அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலவழியைக் கொண்டுவந்து தமிழின் அழிவைத் துரிதப்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில்  கால்டுவெல்லை உங்களுக்கு நினைவுபடுத்துவது  எங்களின் கடமை. நினைவில் வைப்பது நமது கடமை.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்