மது போதையில் மனைவி கொலை பரிதவிக்கும் குழந்தைகள்!

மது போதையில் மனைவி கொலை பரிதவிக்கும் குழந்தைகள்!

மது போதையில் மனைவி கொலை பரிதவிக்கும் குழந்தைகள்!

 

மது போதையில் மனைவியை கொலை செய்து, இரு குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு தப்பிச் சென்ற கட்டிட தொழிலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

மது ஒழிப்பை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிர்ழந்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனாலும், மது போதையில் நடக்கும் குற்றச் செயல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக குற்றஞ்சாட்டுகிறர்கள் சமூக ஆர்வலர்கள். அதை உண்மை என நிரூபிப்பது போல், நெல்லையில் குடிபோதையில் கணவனே மனைவியை கொலை செய்த சோகச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

நெல்லை டவுண் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன். கட்டிடத் தொழிலாளியான இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், இவர்களுக்கு யுவராஜ், வைஷ்ணவி என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். ஆவுடையப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். வழக்கம் போலவே நேற்று இரவும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஆத்திரம் அடைந்த ஆவுடையப்பன், அதிகாலை 2 மணிக்கு எழுந்து, அசந்து தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கிறார். ரத்த வெள்ளத்தில் பிணமாக ராமலட்சுமி கிடந்த நிலையில், தூக்கத்தில் இருந்து எழுந்த குழந்தைகள் அச்சத்தில் கதறி அழுதுள்ளன. தொடர்ந்து குழந்தைகள் அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்துள்ளனர்.

அப்போது, ராமலட்சுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராமலட்சுமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மது போதையால் இந்த கொலை நடந்திருப்பதாக உறுதிபடுத்தி உள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ஆவுடையப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.

போதையின் கொடூரத்தால் பச்சிளம் குழந்தைகள் இருவர் ஆதரவு இல்லாமல் பரிதவித்திருக்கும் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்