மது பழக்கத்தை காட்டி கொடுத்ததால் 7 வயது சிறுவன் கொலை

மது பழக்கத்தை காட்டி கொடுத்ததால் 7 வயது சிறுவன் கொலை

மது பழக்கத்தை காட்டி கொடுத்ததால் 7 வயது சிறுவன் கொலை
 
சென்னை சாந்தோம் அருகே உள்ள நொச்சி நகரை சேர்ந்தவர்கள் சதீஷ்–ரதி. இவர்களது 7 வயது மகன் லோகேஷ்.
இவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலையில் இருந்து லோகேசை காணவில்லை. அவன் எங்கு சென்றான்? என்ன ஆனான் என்பது தெரியாமல் இருந்தது. இது பற்றி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான லோகேசை தேடி வந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள கழிவறை ஒன்றில் லோகேஷ் காயங்களுடன் பிணமாக கிடந்தான். அவனது கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாம் வின்சென்ட் அங்கு விரைந்து சென்று லோகேசின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
சிறுவன் லோகேஷ், கழுத்தை இறுக்கி அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களையும், போலீசாரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சிறுவன் லோகேஷ் வசித்து வரும் பகுதியில் 16 வயது கூட நிரம்பாத சிறுவர்கள் திரண்டு மது அருந்துதல், கஞ்சா புகைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை லோகேஷ் பார்த்து விட்டு தனது பாட்டி பிரேமாவிடம் போய் அடிக்கடி கூறியுள்ளான். இதனை பிரேமா கண்டித்துள்ளார்.
பிரேமாவின் இந்த நடவடிக்கை போதையில் மூழ்கிப் போன சிறுவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் லோகேஷ் தானே என்று கருதிய அவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்னரே இது தொடர்பாக அவனை அடித்து உதைத்து தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் தான் நேற்று காலையில் இட்லி வாங்குவதற்காக கடைக்கு சென்ற லோகேசை, போதை சிறுவர்கள் சிலர் வாயை பொத்தி தூக்கிச் சென்று கழுத்தை இறுக்கி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளனர்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் சிறுவர்கள் 6 பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களில் லோகேசை கொலை செய்தது யார்? என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்து இன்று சிறையில் அடைக்கிறார்கள்.
சிறுவன் கொலை செய்யப்பட்ட நொச்சி நகர் பகுதியில் பாழடைந்து கிடக்கும் கட்டிடங்கள் மற்றும் கழிவறைகளில் வைத்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மது அருந்துதல் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களில் ஈடுபட்டு வருவது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சிறுவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒரு கும்பல் சப்ளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே பட்டப்பகலிலேயே அப்பகுதியில் இளைஞர்களும், சிறுவர்களும் போதையில் மூழ்கி கிடப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்