அம்மா விதைகள் - அடுத்த அம்மா திட்ட அறிவுப்புகள்

அம்மா விதைகள் - அடுத்த அம்மா திட்ட அறிவுப்புகள்

 அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என வளரும் அம்மா திட்டங்கள் வரிசையில் அடுத்த அறிவிப்பாக வந்துள்ளது, 'அம்மா விதைகள்'. இதற்கெனத் தரமான, சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்வதற்காக, 156 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை ஒன்றை ஏற்படுத்த, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

 இது தொடர்பாகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ், 2014 ஆகஸ்டு 7ஆம் தேதி அவர் அறிவித்ததாவது:
 
மண் வளத்தை மேம்படுத்துதல், நவீன உத்திகளைக் கையாளுதல், விதை, நுண்ணூட்டச் சத்து, உரங்கள் ஆகியவை உரிய நேரத்தில் கிடைக்கச் செய்தல், பயிர்க் கடன் வழங்குதல், தீவிர சாகுபடி முறை, நுண்ணீர் பாசனத் திட்டம், நெல் நடவு இயந்திரங்கள், களை எடுக்கும் கருவிகள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்குதல் போன்றவற்றின் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
 
இதன் காரணமாக, 2013-14ஆம் ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் 110.65 லட்சம் மெட்ரிக் டன் என்ற உயர் நிலையைத் தமிழ்நாடு எய்தி, மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 
நாட்டின் முதன்மைத் தொழிலாகவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், கிராமப்புற மக்களின் வாழ்வுக்கு ஆதாரமாகவும் விளங்குகின்ற வேளாண் தொழிலை மேம்படுத்தும் வகையில், கீழ்க்காணும் திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
 
1. இடு பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட விவசாயப் பணிகள் மற்றும் அறுவடைக்கு பிந்தைய செயல்பாடுகள் ஆகியவற்றில் மகளிருக்கு பயிற்சி வழங்கும் “அம்மா பண்ணை மகளிர் திறன் மேம்பாட்டுத் திட்டம்” 113 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டத்தின் கீழ், நடப்பு ஆண்டில் 770 “பண்ணை மகளிர் குழுக்கள்” அமைத்து, உரிய கடன் வசதி மற்றும் சுழல் நிதி வழங்கப்படும்.
 
2. தமிழக விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை அதிகளவில் உபயோகிப்பதை ஊக்குவிக்கும் வகையில், அரசு விதைப் பண்ணைகள், விதை உற்பத்தி செய்யும் நிலையங்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து, உரிய பணியாளர்களை நியமித்து, 156 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை ஒன்று ஏற்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு உற்பத்தி செய்யப்படும் தரமான, சான்று பெற்ற விதைகள் “அம்மா SEEDS” என்ற பெயரில் “அம்மா சேவை மையம்” விற்பனை வாயில்கள் மூலம் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
 
3. வேளாண்மைக்கான ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், அதிகரித்து வரும் வேளாண் கல்விக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பயன் பெறும் வகையிலும், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை, தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் ஆகிய இடங்களில் தலா ஒன்று வீதம் மூன்று வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் 150 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

4. தமிழ்நாட்டில் உணவு தானிய உற்பத்தியை மேலும் பெருக்கும் வகையில், 16 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில், “விவசாயிகள் சார்ந்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க முறை” செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்படி, ‘விவசாய உற்பத்தியாளர் குழுக்கள்’ அமைக்கப்படும்.
 
மேலும், “பண்ணை பயிர் மேலாண்மைத் திட்டம்” என்னும் தகவல் தொழில்நுட்பம், தோட்டக் கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்படும். தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மைத் திட்டத்துடன் பண்ணைப் பயிர் மேலாண்மைத் திட்டமும் இணைக்கப்படும். மேலும், உற்பத்தியாளர் குழுக்களுக்கு லாபகரமான விலை கிடைக்க இக்குழுக்களை இணைத்து ஒன்பது விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்படும்.
 
இவையன்றி, மாவட்ட அளவிலான வேளாண் விரிவாக்க அலுவலர்களையும் ஊக்குவிக்கும் வகையில், சாதனை புரியும் விவசாயிகளுக்கும், சிறந்த முறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் மாவட்ட அளவில் பரிசுகள் வழங்கப்படும். இத்திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்திட, துறை அலுவலர்களுக்கு 143 பழைய வாகனங்களுக்குப் பதிலாக புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
 
5. பயிர் உற்பத்தியை அதிகரிக்கும் நவீனத் தொழில்நுட்பங்களை வழங்கவும், முக்கிய இடுபொருட்கள், வேளாண் கருவிகள் மற்றும் பயிர் பாதுகாப்பு கருவிகளை இருப்பு வைத்து வழங்கவும், செய்தி மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வாயிலாக விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரையிலான அனைத்துச் செயல்பாடுகளுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கவும், அனைத்துப் பயனாளிகளையும் ஒருங்கிணைத்து, பன்முக செயல்பாட்டு முனையமாகத் திகழவும், கருத்துக் காட்சி, விவசாயிகள் பயிற்சி அறை, இடுபொருள் இருப்பு வைத்து விநியோகிக்கும் வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் 50 வட்டாரங்களில் 75 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
 
6. வேளாண் தொழிலாளர்கள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க 212 கோடி ரூபாய் அளவுக்கு எனது தலைமையிலான அரசு மானியம் வழங்கியுள்ளது. சாகுபடி செய்யப்படும் முக்கிய பயிர்களுக்குத் தேவையான அனைத்து வகையான வேளாண் கருவிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள், விவசாயிகளுக்கு நியாயமான வாடகைக்கு வழங்கவும், இந்த இயந்திரங்களைப் பழுது நீக்கவும் பொது மற்றும் தனியார் பங்கேற்புடன் 385 வட்டாரங்களிலும் ‘வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மற்றும் இயந்திரங்கள், பழுது நீக்கும் சேவை மையங்கள்’ 126 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
 
7. வேளாண்மையில், குறிப்பாகத் தோட்டக் கலையில் விளை பொருட்கள் விரைவில் வீணாகும் தன்மை கொண்டவை. இவற்றைப் பதப்படுத்துவதால், வேளாண் விளைபொருட்களில் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு குறைக்கப்படுவதுடன், விவசாயிகளுக்குச் சீரான விலையும், நுகர்வோருக்கு ஆண்டு முழுவதும் பதப்படுத்திய, பக்குவப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களும் கிடைக்கும். எனவே, அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, விருதுநகர் மற்றும் சேலம் ஆகிய 10 மாவட்டங்களில், அம்மாவட்டத்திற்கு உகந்த வகையில் அரசு அல்லது பொது மற்றும் தனியார் துறை அல்லது கூட்டு நிறுவனங்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தனியார் தொழில் முனைவோர் மூலம் “வேளாண் பதப்படுத்தும் மாதிரித் தொழிற்சாலை” 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு இதற்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
 
8. பயறு உற்பத்தியில் தன்னிறைவு அடைய ஏதுவாக, சாகுபடி பரப்பினை உயர்த்த, துவரைப் பயிர் சாகுபடி ஓர் இயக்கமாகச் செயல்படுத்தப்படும். துவரை சாகுபடியை அதிகரிக்க பல்வேறு உத்திகள் கடைபிடிக்கப்படுவதுடன், துவரை சாகுபடி செய்யும் விவசாயிகள் குழுக்கள் அமைத்து, அக்குழுக்களை விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பாக ஒருங்கிணைத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவுத் துறை மூலம் அரசே நியாயமான விலைக்கு துவரையினைக் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். துவரை பயறுக்கான இச்சிறப்புத் திட்டம் 55 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

 9. காலநிலை மாற்றம், குறைந்து வரும் இயற்கை வளங்கள் மற்றும் வளர்ந்து வரும் போட்டி சூழல் போன்றவற்றால் வேளாண்மையில் ஏற்படும் பின்னடைவுகளை எதிர்கொண்டு நிலைத் தன்மையை ஏற்படுத்தும் வகையில், நடப்பு ஆண்டில் வேளாண் ஆராய்ச்சியின் மூலம் 28 கோடி ரூபாய் செலவில் 6 இனங்களில் மகத்துவ மையங்கள் உருவாக்கப்படும். இதன்படி, கோயம்புத்தூரில் மூலக் கூறு மரபியல் மகத்துவ மையம் ஒன்றும்; செட்டிநாட்டில் மானாவாரி பண்ணைய மகத்துவ மையம் ஒன்றும்; திருச்சிராப்பள்ளியில், மண் வள மகத்துவ மையம் ஒன்றும், மதுரையில் புதுமை ஆய்வு மகத்துவ மையம் ஒன்றும், திருச்சிராப்பள்ளியில் பண்ணை மகளிர் அறிவு மேம்பாட்டு மையம் ஒன்றும், பட்டுக்கோட்டையில் எண்ணெய்ப் பனை மகத்துவ மையம் ஒன்றும் உருவாக்கப்படும்.
 
10. சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்த வேளாண் பணிகளை மேம்படுத்துவதற்காக வேலுhர், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில், மாவட்டத்திற்கு ஒரு கிராமம் வீதம், கிராமம் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில், 5 மாதிரி இயற்கைக் கிராமங்கள் உருவாக்கப்படுவதோடு, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை வலுப்படுத்தும் நோக்கோடு 150 சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மாதிரி கிராமங்களும், அதாவது Eco-Friendly Integrated Pest Management Villages அமைக்கப்படும். மேலும், 7 புதிய திரவ உயிர் உர உற்பத்தி ஆய்வகங்கள் அமைக்கப்படுவதுடன், அங்கக உரங்களின் சத்துக்களை ஆய்வு செய்வதற்கு 2 புதிய ஆய்வகங்கள் அமைக்கப்படும். இதுவன்றி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயற்கை பண்ணையப் பணிகளைத் தரப்படுத்தி, இயற்கை பண்ணையத்தில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு ஆய்வக வளாகமும் 22 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
 
11. நவீன வேளாண்மையில் விதைப்பு முதல் அறுவடை மற்றும் சந்தைப்படுத்துதல் வரையிலான பல்வேறு வேளாண் பணிகளுக்கு திறன் மேம்பாட்டுடன் கூடிய மனித வள ஆற்றல் அவசியமாகிறது. எனவே, மனித வள ஆற்றலை அதிகரிக்கும் வகையில் வேளாண் திறன் மேம்பாட்டு மையம் ஒன்று துவக்கப்படும். இதன் மூலம் வரும் 10 ஆண்டுகளில் 20 கோடி ரூபாய் செலவில் 10 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு 1 வருட சான்றிதழ்ப் படிப்பு பயிற்றுவிக்கப்படும்.
 
12. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், விலை கட்டுப்படி ஆகாத பட்சத்தில், சேமித்து வைத்து நல்ல விலை வந்தவுடன் விற்பனை செய்வதற்கும், ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் நாயுடுமங்கலம் வட்டங்களில் தலா ஒன்றும், விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் ஒன்றும் என மொத்தம் மூன்று இடங்களில் புதிய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் அமைக்கவும், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இயங்கி வரும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு புதிய கட்டடம் கட்டவும் 2 கோடியே 38 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
 
13. மரபு சாரா எரிசக்தியை ஊக்கப்படுத்துவதில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதுடன், பாசன நீர் இறைக்கும் பம்புகள், வேளாண் பொருட்களை உலர்த்துவது மற்றும் பதப்படுத்துவது ஆகியவற்றையும் செயல்படுத்திடலாம். சூரிய சக்தி மூலம் இயங்கும் விவசாய மோட்டார் பம்பு செட்டுகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு எனது அரசால் வழங்கப்பட்டு உள்ளன. 2013-14ஆம் ஆண்டில் சூரிய கூடார மிளகாய் உலர்த்தி அமைப்புகள் 40 லட்சம் ரூபாய் செலவில் மிளகாய் பயிரிடும் 20 குழுக்களுக்கு வழங்கப்பட்டன. சூரிய சக்தி பயன்பாட்டினை விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள் மேற்கொள்ள ஊக்குவிக்கும் வகையில், 50 விழுக்காடு மானியத்தில் சூரிய கூடார உலர்த்திகள் படிப்படியாக நிறுவப்படும். முதல் கட்டமாக 2014-2015 ஆம் ஆண்டில் 4 கோடி ரூபாய் மதிப்பில் 100 சூரிய கூடார உலர்த்திகள் நிறுவப்பட்டு, வேளாண் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் மற்றும் விற்பனை வசதியுடன் உரிய முறையில் இணைக்கப்படும். இதற்காகக் கடன் வசதி தேவைப்படும் விவசாயிகளுக்குக் கூட்டுறவுத் துறை மூலம் உரிய கடன் வழங்க ஆவன செய்யப்படும்.
 
மேற்காணும் நடவடிக்கைகள், விவசாய உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கவும், விவசாயிகள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொண்டு அமைகிறேன்.
 
இவ்வாறு ஜெயலலிதா உரை ஆற்றினார்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்